வாட்ஸப் அலப்பறைகள்

Posted: June 13, 2015 in அனுபவம்

செவ்விலியக்கியம் குறித்து இடையறாது பேசும் எங்களது கல்லூரி புரட்சி குரூப் தவிர்த்து எண்ணற்ற குரூப்புகளில் நண்பர்கள் இணைத்துவிட்டாலும் தொடங்கிய சூட்டோடு அடங்கிவிடுவார்கள்.சில காலங்கள் ஜடமாக பேச்சு மூச்சில்லாமல் கிடப்பார்கள்.அல்லது சுரத்தில்லாத அதர பழைய ‘காம’டியோ,உணர்ச்சி பீறிட்டுக்கொள்ளும் தத்துவார்த்த வசனங்களையோ பகிர்வார்கள்.இன்னும் சில குரூப்புகளில் இணையும்போது இருபது முப்பது பேர் இருந்திருப்போம்.வெகு விமரிசையாக கதைத்திருப்போம்.உலகின் ஒட்டுமொத்த போர்னோ இலக்கியங்களும் பகிரப்பட்டிருக்கும்.என்னடா ஒச்சையே இல்லையே என்று எட்டிப்பார்த்தால் நானும் குரூப் அட்மினும் மட்டும் இருப்போம்.வாழ்ந்துகெட்ட வீட்டைப் பார்ப்பதுபோன்ற எண்ணம்தான் மேலோங்கும்.

இப்படிப்பட்ட தருணத்தில் இருபத்து மூன்றாவது குரூப்பில் சில தினங்களுக்கு முன்பு என்னை பேருவைகையோடு இணைத்துக் கொண்டார் நண்பரொருவர்.”தேசப்பற்று தமிழர்கள்” என்ற அந்த குரூப்பினுள் சுமார் நூற்றி இருபதுபேர் இருந்தனர்.இணைத்துக்கொண்ட அன்பரைத் தவிர வேறு யாரையும் தெரியாது.இணைத்துக் கொண்டவரையே இரண்டு மாதங்களாகத்தான் தெரியும்.அதுவும் அலுவலக ரீதியில் தொடர்புடையவர் என்பதால் கண்டுகொள்ளவில்லை.

தினமும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் குட் மார்னிங்க் என்று ஒரு நண்பர் அனுப்புவார்.அதனைத் தொடர்ந்து அனைவரும் வரிசையாகத் திரண்டு வந்து குட் மார்னிங்க் சொல்வார்கள்.மாற்றி மாற்றி புகைப்படங்களுடன் கூடிய வாழ்த்து,சன்னி லியோன் குட் மார்னிங்க் சொல்லும் தோரணையில் கச்சை கட்டி நிற்பது போன்ற கணக்கிலடங்கா வாழ்த்துக்களை குவித்து முடிக்கும் சமயம் மணி பதினொன்று ஆகும்.உடனே முதல் நண்பர் நண்பகல் வாழ்த்துக்களை கூற ஆரம்பிப்பார்.அவரைத் தொடர்ந்து அனைவரும் முட்டி முனங்குவார்கள்.இதற்கிடையில் ஒரு நண்பர் சூரியனின் உக்கிரத்தை கவிதையாய் வேறு வடித்துவிடுவார்.அதற்கு அற்புதம்,உலகமகா கவிதை,மேனியில் மயிற்கூச்செரியும் படைப்பு என்று கட்டு கட்டாக வன் புகழ்ச்சிகளை அடுக்குவார்கள்.அடுத்து மதிய உணவு,பிற்பகல்,மாலை,முன்னிரவு,நள்ளிரவு,பின்னிரவு என்று வாழ்த்துக்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.பின்னிரவு சமயத்தில் கடும் உக்கிரமாக இருப்பார்கள்.

எவ்வளவு நாளைக்குத்தான் பொறுப்பது குரூப்பை விட்டு விலகிவிடலாம் என்று எண்ணிய தருணம் ஒரு சம்பவம் நடந்தது.என்னைப்போலவே உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருந்த நண்பரொருவர் குரூப்பை விட்டு விலகிவிட்டார்.அதாவது இன்னார் Left group என்று திரையில் காண்பிக்கவும் அனைவரும் கொந்தளித்துவிட்டனர்.

”அவன் யாருடா குரூப்ப விட்டு போறதுக்கு நம்மளா தூக்குன மாதி இருக்கணும் அவன உள்ள இழுங்க அட்மின்”என்று ஒருவர் முகம் குருதிச்சிவப்பில் இருக்கும் ஸ்மைலியோடு அனுப்பினார்.

அவ்வளவுதான் விலகிய அன்பர் குரூப்பிற்குள் கரகரவென இழுத்துக் கொண்டுவரப்பட்டார்.வரிசையாக அனைவரும் திரண்டு வந்து ஏக வசனத்தில் அவரது தலைமுறைகளையெல்லாம் நடு சந்தியில் நிறுத்தி அழகுபார்த்தனர்.பத்து நிமிடங்கள் இடையறாது வசை மழை.அன்பர் ஏதோ டைப்பிங்க் என்று காட்டிக்கொண்டிருந்த சமயம் அவரை குரூப்பை விட்டு வெளியேற்றிவிட்டனர்.

இதற்குமேல் எப்படி குரூப்பை விட்டு வெளியேறவேண்டும் என்ற எண்ணம் வரும்.இருந்தாலும் மன ஆற்றாமைக்காக நண்பருக்கு சில தினங்களுக்கு முன்பு என்னை குரூப்பைவிட்டு நீக்கிவிடுங்கள்.மிகுந்த மன உலைச்சலைக் கொடுக்கிறது என்று ஒரு தனி மடல் வரைந்தேன்.அதைப் படித்துவிட்டார்.ஆனால் அதற்கு பதிலேதும் கூற முற்படவில்லை.சரி பேசிவிடுவோம் என்று போனில் அழைத்தேன்.முழு ரிங்க் முடிந்ததும் வாட்ஸப்பில் செய்தி அனுப்பியிருந்தார்.

”ஸாரி நானே நினைச்சாலும் நீங்க வெளிய போகமுடியாது”.

“சரி வேண்டாம்.என்னோட நண்பர்கள் நாலு பேரு நம்பர் தாறேன் அவங்களையும் சேத்து விடுங்க”(செவ்விலக்கியம் பேசக்கூடிய என் உயிரிலும் மேலான் சுரத்துகள்)

இதையும் படிச்சிட்டாரு.ஆனா இன்னும் ரிப்ளை பண்ணல.என்ன ஆனாலும் களமாடுறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

மண்டைக்காட்டு பகவதி என்ன ஒன்னு ரக்ஸிக்கணும்!!

Leave a comment