தனிமை

Posted: August 26, 2014 in கவிதை

மேட்டுத்திடல் மருத்துவமனையின்

இரண்டாம் தளத்தில் வலப்புறமிருந்த

குறுகிய அறையில்

பச்சைபோர்வை விரிக்கப்பட்ட கட்டிலில்

சதையை முற்றிலும் தின்றுதீர்த்துவிட்ட

எலும்புடலோடு கிடக்கிறாள் கிழவியொருத்தி

மஞ்சள் ஆரஞ்சு வண்ண ஒயர்கொண்டு பின்னப்பட்ட

கூடையில் வெளிறிய தேங்காய்பூ துண்டுக்கடியில்

மங்கிய நிறத்தில் தெரிகிறது தூக்குச்சட்டியொன்று

நாளை மாலைதான் வருவேனென்று

கூறிச்சென்ற மகன் வரும்முன்

தூக்குச்சட்டியிலுள்ள கஞ்சியை எப்படியாவது

அடித்தளத்திலுள்ள குப்பைத்தொட்டியில் சேர்ப்பதே

அவளுக்கு அப்போதைய பெருங்கவலை.

Leave a comment